ஸ்ரீ-பகவான் உவாச
மய்யா-வேஷ்ய மனோ யே மாம்
நித்ய–யுக்தா உபாஸதே
ஷ்ரத்தயா பரயோபேதாஸ்
தே மே யுக்ததமா மதா:
மொழிபெயர்ப்பு
புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: தனது தனிப்பட்ட உருவின் மீது மனதை நிலைநிறுத்தி, திவ்யமான நம்பிக்கையுடன் எப்போதும் எனது வழிபாட்டில் ஈடுபட்டிருப்பவர்கள் மிகவும் பக்குவமானவர்களாக என்னால் கருதப்படுகிறார்கள்.
பொருளுரை
எவனொருவன் தனது தனிப்பட்ட உருவத்தின் மீது மனதை நிலைநிறுத்தி, பக்தியுடனும் நம்பிக்கையுடனும் தன்னை வழிபடுகின்றானோ, அவனே யோகத்தில் மிகவும் சிறந்தவனாகக் கருதப்படவேண்டும் என்று கிருஷ்ணர் மிகத் தெளிவாக அர்ஜுனனின் கேள்விக்கு இங்கு விடையளிக்கின்றார். இத்தகு கிருஷ்ண உணர்வில் இருப்பவனுக்கு ஜடச்செயல்கள் எதுவும் கிடையாது; ஏனெனில், அனைத்தும் கிருஷ்ணருக்காகச் செய்யப்படுகின்றன. தூய பக்தன் சதா சர்வ காலமும் செயலில் ஈடுபட்டுள்ளான்—சில நேரங்களில் அவன் ஜபம் செய்கின்றான், சில நேரங்களில் கிருஷ்ணரைப் பற்றிய நூல்களைப் படிக்கவோ கேட்கவோ செய்கின்றான், சில நேரங்களில் பிரசாதம் சமைக்கின்றான், சில நேரங்களில் கிருஷ்ணருக்காக ஏதேனும் வாங்குவதற்குச் சந்தைக்குச் செல்கின்றான், சில நேரங்களில் ஆலயத்தை தூய்மை செய்கின்றான், பாத்திரங்களைக் கழுவுகின்றான்—இவ்வாறாக அவன் எதைச் செய்தாலும் சரி, தனது செயல்களை கிருஷ்ணருக்கென அர்ப்பணிக்காமல் நொடிப்பொழுதையும் கழிப்பதில்லை. இத்தகு செயல் பூரண சமாதியில் இருப்பதாகும்
(பகவத் கீதை உண்மையுருவில் 12.2 )

