கோவில் தெய்வ வழிபாட்டிற்காக அறுபத்து நான்கு விதிமுறைகள் உள்ளன. தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படும் பல பொருட்கள் உள்ளன. சில மதிப்பு மிகுந்தவை, சில குறைவான மதிப்புடையவை. “ஒரு பக்தர் எனக்குச் சிறிய மலர், இலை, சிறிது நீர் அல்லது சிறிய பழத்தை அர்ப்பணித்தால், நான் அதை ஏற்றுக்கொள்வேன்” என்று பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது. உண்மையான நோக்கம் என்னவென்றால், பகவானிடம் ஒருவருக்குள்ள அன்பான பக்தியை வெளிப்படுத்துவதாகும்; அர்ப்பணிக்கப்படுபவை இரண்டாமிடம் பெறுகின்றன. ஒருவர் பகவானிடம் அன்பான பக்தியை வளர்க்காமல், பலவித உணவுப்பொருட்கள், பழங்கள், மற்றும் மலர்களை உண்மையான பக்தியின்றி அளிப்பாரானால், அது பகவானால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. நாம் பரம புருஷ பகவானுக்கு லஞ்சம் கொடுக்க முடியாது. அவர் மிகவும் சிறந்தவராதலால், நமது லஞ்சத்திற்கு மதிப்பில்லை, அவருக்கு எந்தத் தட்டுப்பாடும் கிடையாது. அவர் அவரிடமே நிறைந்திருப்பதால், நாம் அவருக்கு என்ன கொடுக்க முடியும்? எல்லாம் அவரால் உருவாக்கப்படுகின்றன. நாம் பகவானிடம் நமது அன்பையும் நன்றியையும் காட்டும் பொருட்டு பற்பல பொருட்களை அர்ப்பணிக்கின்றோம்.
பகவானுக்குக் காட்டும் இந்த நன்றியும் அன்பும், ஒவ்வொரு உயிரினத்திலும் பகவான் வாழ்கிறார் என்பதை அறியும் தூய பக்தரால் வெளிப்படுத்தப்படுகிறது. கோவில் வழிபாடு பிரசாதம் வழங்குதலையும் நிச்சயமாக உள்ளடக்கியது. ஒருவர் தன் சொந்த வீட்டில் அல்லது சொந்த அறையில் கோவில் கட்டி, பகவானுக்குச் சிலவற்றை அர்ப்பணித்து, பின்னர் உண்ண வேண்டும் என்பதல்ல. ஆம், அது வெறும் சமையல் செய்து, பகவானுடன் ஒருவர் கொண்டுள்ள தொடர்பைப் புரிந்துகொள்ளாமல் உண்பதை விட மேலானது; இந்த விதத்தில் செயல்புரியும் மக்கள் விலங்குகள் போன்றவர்கள். ஆனால் இறைவனைப் புரிந்துகொள்ளுதலின் மேலான நிலைக்குத் தன்னை உயர்த்திக்கொள்ள விரும்பும் பக்தர், பகவான் எல்லா உயிரினத்திலும் உள்ளார் என்று அறிய வேண்டும். முந்தைய ஸ்லோகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல, ஒருவர் பிற உயிரினங்களிடம் கருணையுள்ளவராக இருக்க வேண்டும். ஒரு பக்தர் பகவானை வழிபட வேண்டும், அதே நிலையில் உள்ளவர்களிடம் நட்புடன் இருக்க வேண்டும், அறியாமையில் உள்ளவர்களிடம் கருணையுடன் இருக்க வேண்டும். ஒருவர் பிரசாதம் வழங்குவதன் மூலம் அறியாமை நிறைந்த உயிர்களிடம் தன் கருணையை வெளிப்படுத்த வேண்டும். அறியாமையுள்ள மக்களுக்குப் பிரசாதம் வழங்கும் செயல், பரம புருஷ பகவானுக்கு வழிபாடு செய்யும் மனிதர்கள் ஆற்ற வேண்டிய முக்கியமான பணியாகும்.
உண்மையான அன்பும் பக்தியும் பகவானால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மிகுந்த மதிப்புள்ள உணவுப்பொருட்கள் ஒருவருக்குப் பரிசளிக்கப்படலாம். ஆனால் அந்த மனிதருக்குப் பசி இல்லையென்றால், அந்தப் படையல்கள் அவருக்குப் பயனற்றவை. அதுபோல, நாம் தெய்வத்திற்குப் பல மதிப்புள்ள பொருட்களை அர்ப்பணிக்கலாம். ஆனால் நமக்கு உண்மையான பக்தி உணர்வும், எங்கும் பகவான் நிறைந்திருக்கிறார் என்ற உணர்வும் இல்லையென்றால், நமது பக்தித் தொண்டில் குறைபாடு உள்ளது என்று பொருள். அந்த அறியாமையுள்ள நிலையில் நாம் பகவானால் ஏற்றுக்கொள்ளக்கூடிய எதையும் அர்ப்பணித்துப் பயனில்லை.
(ஶ்ரீமத்-பாகவதம் 3.29.24 / பொருளுரை)
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆