பாண்டவர்கள் தங்களது மனைவியான திரௌபதியுடன் வனவாசத்தில் இருந்தபோது, துர்வாசரும் அவரது சீடர்களும் வனத்திற்குச் சென்று பாண்டவர்களைச் சந்தித்தனர். சத்திரியர்கள் என்ற முறையில் பாண்டவர்கள் பிராமணர்களை வரவேற்று உபசரிக்கக் கடமைப்பட்டவர்கள். ஆனால், அவர்கள் துர்வாசரின் வருகைக்கு முன்னரே உணவருந்தி முடித்திருந்தனர் என்பதால், விருந்தினர்களுக்கு வழங்க அவர்களிடம் உணவு ஏதுமில்லை. குழப்பமடைந்த பாண்டவர்கள் உணவளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்குள் ஸ்நானம் செய்துவிட்டு வருமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டனர்.
பகவான் கிருஷ்ணர் தமது பக்தர்களை எப்போதும் காக்க வேண்டும் எனச் சபதம் கொண்டுள்ளார். எனவே, பாண்டவர்கள் குழப்பத்திலிருந்தபோது கிருஷ்ணர் அங்கே சென்று, “என்ன பிரச்சனை?” என்று வினவினார். அவர்கள் நடந்ததை விளக்கினர். கிருஷ்ணர் திரௌபதி உணவருந்திவிட்டாளா என்பதை விசாரித்தார். அவளும் தான் உண்டு முடித்துவிட்டதாகக் கூறினாள். [திரௌபதியிடம் ஓர் அட்சய பாத்திரம் இருந்தது: அவள் உணவருந்தாதவரை அந்தப் பாத்திரத்திலிருந்து எத்தனை விருந்தினர்கள் வந்தாலும், அவளால் உணவளிக்க முடியும்.]
சமையலறையில் சிறிதளவேனும் உணவு உள்ளதா எனக் கிருஷ்ணர் வினவ, பாத்திரத்தின் ஓரத்தில் சிறிதளவு ஒட்டிக்கொண்டிருந்த உணவினைத் திரௌபதி கிருஷ்ணரிடம் கொடுத்தாள். கிருஷ்ணர் அதை உட்கொண்டவுடன், நதியில் நீராடிக்கொண்டிருந்த துர்வாச முனிவரும் அவரது சீடர்களும் தங்களது வயிறு நிரம்பியதை உணர்ந்தனர். பாண்டவர்களுடைய உணவை ஏற்க இயலாதே என்ற தர்மசங்கடத்தில், அவர்கள் நதிக்கரையிலிருந்து அப்படியே சென்றுவிட்டனர்.
ஏதேனும் ஒரு வகையில் கிருஷ்ணரைத் திருப்திப்படுத்துங்கள். ஸம்ஸித்திர் ஹரி-தோஷணம். அப்போது எல்லாப் பக்குவத்தையும் பெறுவீர்கள். இது மிகவும் எளிய வழிமுறை. கிருஷ்ணர் கூறுகிறார்: பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி, “அன்புடனும் பக்தியுடனும் இலையோ, பூவோ, பழமோ, நீரோ எனக்கு அர்ப்பணியுங்கள்.” சுவைமிக்க உணவை பெருமளவில் கொண்டு வருமாறு கிருஷ்ணர் கேட்கவில்லை. கிருஷ்ணர் யாசகர் அல்லர்; உங்களது இடத்திற்கு வந்து ஏதேனும் உண்பதற்கான பசியும் அவருக்கு இல்லை. உங்களது அன்பை மட்டுமே அவர் விரும்புகிறார்.
குடும்பத்தைப் பராமரிப்பதற்காக இரவும் பகலும் கடுமையாக உழைக்கும் குடும்பத் தலைவர், தமது மனைவி மக்களிடமிருந்து அன்பை மட்டுமே எதிர்பார்க்கிறார். அதுவே அவர் பணம் சம்பாதிப்பதற்குத் தூண்டுகோலாக உள்ளது. பணம் சம்பாதிக்கக் கடுமையாக உழைக்கும் அவர் தனக்கென்று சிறிதளவே விரும்புகிறார். அதுபோல, கிருஷ்ணரும் தமது குடும்பத்தை விருத்தி செய்வதற்காக எண்ணற்ற உயிர்வாழிகளாகத் தம்மை விரிவுபடுத்தியுள்ளார். அதற்கான காரணம் என்ன? ஆனந்தமயோ ’ப்யாஸாத். அவர் பூரண ஆனந்தத்துடன் இருப்பதால் தனக்கும் உயிர்வாழிகளுக்கும் இடையில் அன்புப் பரிமாற்றத்தை அனுபவிக்க விரும்புகிறார். இதுவே அவரது நோக்கம். அவர் அன்பை விரும்புகிறார். இல்லாவிட்டால் அவர் ஏன் நம்மைப் படைத்தார்? ஆனால், அயோக்கியர்கள் அதை மறந்துவிட்டனர். “கடவுள் இல்லை; நானே கடவுள்; நானே அனுபவிப்பாளர்,” என்றெல்லாம் அவர்கள் பிதற்றுகின்றனர். கடவுளை நேசிப்பதற்குப் பதிலாக அவர்களே ‘கடவுளாக’ மாறுகின்றனர். இஃது ஒட்டுமொத்த சூழ்நிலையையும் சீரழித்துவிட்டது.
ஶ்ரீல பிரபுபாதா
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆