“புல்லாங்குழல் இல்லாத கிருஷ்ணரின் படம் கிடைக்குமா?” புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணரை வீட்டில் வைத்தால், வீட்டில் உள்ள செல்வம் அனைத்தையும் கிருஷ்ணர் ஊதி விடுவார் என்பது சிலரின் நம்பிக்கை. அவர்களது நம்பிக்கையில் ஏதேனும் உண்மை உள்ளதா? கிருஷ்ணரை புல்லாங்குழலுடன் வைக்கலாமா, கூடாதா? சற்று அலசிப் பார்க்கலாம்.
கிருஷ்ணரின் திருமேனி வர்ணனை
கிருஷ்ணரை வழிபட விரும்புவோர் கிருஷ்ணரை கிருஷ்ணராக வழிபட வேண்டும். அதாவது, கிருஷ்ணருடைய திருமேனியைப் பற்றிய வர்ணனைகள் சாஸ்திரங்களில் எவ்வாறு கூறப்பட்டுள்ளதோ, அதன்படி கிருஷ்ணரின் படங்களும் கிருஷ்ணரின் விக்ரஹங்களும் அமைய வேண்டும். அப்போதுதான் கிருஷ்ணர் கிருஷ்ணராக இருப்பார். கிருஷ்ணரின் திருமேனி சாஸ்திரங்களில் பல இடங்களில் விவரிக்கப்பட்டுள்ளது.
பிரம்மாண்டத்தின் படைப்பாளரான பிரம்மதேவர், ஶ்ரீ பிரம்ம ஸம்ஹிதையில் (5.30) அத்திருமேனியின் அழகை பின்வருமாறு வர்ணிக்கிறார்:
வேணும் க்வணந்தம் அரவிந்த−தலாயதாக்ஷம்−
பர்ஹாவதம்ஸம் அஸிதாம்புத−ஸுந்தராங்கம்
கந்தர்ப−கோடி−கமனீய−விஷேஷ−ஷோபம்
கோவிந்தம் ஆதி−புருஷம் தம் அஹம் பஜாமி
பொருள்: “புல்லாங்குழலை வாசிப்பவரும், தாமரை மலரைப்போன்ற கண்களை உடையவரும், மயிலிறகினை தலையில் அணிந்தவரும், கார்மேக நிற மேனி கொண்டவரும், கோடிக்கணக்கான மன்மதர்களை வசீகரிக்கும் பேரழகு கொண்டவரும், ஆதி புருஷருமான கோவிந்தனை நான் வழிபடுகிறேன்.”
கிருஷ்ணரை உள்ளது உள்ளபடி அணுகுவோம்
கிருஷ்ணரை வழிபட விரும்புவோர் அவர் எவ்வாறு உள்ளாரோ, அவ்வாறு அவரை வழிபட வேண்டும்.
கிருஷ்ணரின் நிறம் கார்மேகம் என வர்ணிக்கப்பட்டுள்ளது; அவரை வெள்ளை நிற திருமேனியுடன் வரையலாமா?
கிருஷ்ணர் தனது தலையில் மயிலிறகினைக் கொண்டுள்ளார் என வர்ணிக்கப்பட்டுள்ளது; அவரை மயிலிறகின்றி வரையலாமா?
கிருஷ்ணரின் திருமேனி மூன்று இடங்களில் வளைந்து காணப்படுவதாக (திரிபங்க லலிதம்) வர்ணிக்கப்பட்டுள்ளது; அவரை நேராக வரையலாமா?
கிருஷ்ணரின் அழகு கோடிக்கணக்கான மன்மதர்களையும் வசீகரிக்கக்கூடியது; அவரை அழகற்றவராக வரையலாமா?
இக்கேள்விகளுக்கெல்லாம் “இல்லை” என்று பதில் கூறுவோர், புல்லாங்குழல் இல்லாத கிருஷ்ணர் வேண்டும் என்று கேட்பது எந்த விதத்தில் நியாயம்? புல்லாங்குழல் கிருஷ்ணரின் இணைபிரியா அடையாளம். அதனை விலக்கிவிட்டு கிருஷ்ணரை வழிபட நினைப்பது முற்றிலும் முட்டாள்தனம்.
நாராயணரின் கைகளில் யாரும் புல்லாங்குழலைக் கொடுப்பதில்லை, இராமரின் கையில் யாரும் கதையைக் கொடுப்பதில்லை, சூலாயுதம் இல்லாத சிவபெருமானின் படம் வேண்டும் என்று யாரும் கேட்பதில்லை. அவ்வாறு இருக்கும்போது, புல்லாங்குழல் இல்லாத கிருஷ்ணர் வேண்டும் என்று கேட்பது நியாயமா?
மூடநம்பிக்கைகளை மூடி வைப்போம்
கிருஷ்ணர் நமது செல்வத்தைச் சுரண்டுபவர் அல்ல; அதற்கான அவசியமும் அவருக்கு இல்லை. அவர் எல்லா செல்வத்திற்கும் அதிபதி (லக்ஷ்மி பதி). நம்முடைய செல்வத்தைச் சுரண்ட வேண்டிய தேவை பிரபஞ்சத்தின் நாயகனுக்கு உண்டோ? கிருஷ்ணரின்பால் நம்மை ஈர்ப்பதற்கு உதவும் புல்லாங்குழலை ஒதுக்குவது அப்பட்டமான மூடநம்பிக்கையாகும்.
கிருஷ்ண பக்தர்கள் கிருஷ்ணரிடம் முழுமையாகச் சரணடைந்தவர்களாகத் தம்மை வைத்துக் கொள்ள வேண்டும். கிருஷ்ணர் நமக்கு பௌதிகச் செல்வங்களைக் கொடுத்தாலும் சரி, கொடுக்காவிட்டாலும் சரி, அல்லது நம்மிடம் உள்ளதை எடுத்துக் கொண்டாலும் சரி… எல்லா சூழ்நிலைகளிலும் கிருஷ்ணரே நமது இறைவன், நமது பிராணநாதர் அவரே என்ற எண்ணத்துடன் வாழ்வதே தூய பக்திக்கு அடையாளமாகும்.
அத்தகைய தூய பக்தியே பகவத் கீதையிலும் பாகவதத்திலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனையே சீடப் பரம்பரையில் வரும் ஆச்சாரியர்கள் நமக்குக் கொடுத்துள்ளனர். அந்த தூய பக்தியைப் பயிற்சி செய்து, பல்வேறு திசைகளிலிருந்து வரும் மூடநம்பிக்கைகளை மூடி வைப்போம்.
புல்லாங்குழல் கொண்ட கிருஷ்ணரை வீட்டில் வைக்கக் கூடாது என்று மூடர்கள் சொல்லும் வேளையில், “புல்லாங்குழல் கொண்ட கிருஷ்ணரை தினமும் தரிசிக்காவிடில் கண்கள் இருந்தும் பயனில்லை” என்று ஶ்ரீமத் பாகவதம் உரைக்கிறது:
அக்ஷண்வதாம் பலம் இதம் ந பரம் விதாம:
ஸக்ய: பஷுன் அனுவிவேஷயதோர் வய°யை:
வக்த்ரம் வ்ரஜேஷ−ஸுதயோர் அனவேணு−ஜுஷ்டம்
யைர் வா நிபீதம் அனுரக்த−கடாக்ஷ−மோக்ஷம்
பொருள்: “நண்பர்களே! நந்த மஹாராஜரின் மகன்களுடைய அழகிய திருமுகங்களைக் காணும் கண்கள் நிச்சயம் அதிர்ஷ்டம் வாய்ந்தவை. அவ்விரு மகன்களும் தங்களது நண்பர்களால் சூழப்பட்டு, பசுக்களை மேய்த்தபடி காட்டினுள் நுழையும்போது, தங்களது திருவாயில் புல்லாங்குழல்களை வைத்தபடி விருந்தாவனவாசிகளின் மீது அன்பான பார்வையைச் செலுத்துகின்றனர். கண்களுடன் வாழ்பவர்களுக்கு அக்காட்சியைத் தவிர சிறந்த காட்சி வேறு எதுவும் இருக்க முடியாது என்று நாங்கள் நினைக்கின்றோம்.” (ஶ்ரீமத் பாகவதம் 10.21.7)
இக்கட்டுரை பகவத் தரிசனம் என்னும் பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்டது. www.tamilbtg.com”
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆