முகதோ ’வர்தத ப்ரஹ்ம புருஷஸ்ய குரூத்வஹ
யஸ் தூன்முகத்வாத் வர்ணானாம் முக்யோ ’பூத் ப்ராஹ்மணோ குரு:
மொழிபெயர்ப்பு
குரு வம்சத்தில் சிறந்தவரே, பிரும்மாண்ட ரூபமான விராட் புருஷரின் வாயிலிருந்து வேத ஞானம் தோன்றியது. இந்த வேத ஞானத்தில் நாட்டம் கொண்டவர்கள், பிராமணர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் எல்லா சமூகப் பிரிவுகளுக்கும் இயல்பான போதகர்களாகவும், ஆன்மீக குருமார்களாகவும் உள்ளனர்.
பொருளுரை
பகவத்கீதை (4.13) கூறுவது போல், மனித சமூகத்தின் நான்கு பிரிவுகளும் பிரும்மாண்ட ரூபத்தின் உடலிலிருந்துதான் விருத்தியடைந்தன. உடலில், வாய், கரங்கள், இடுப்பு மற்றும் கால்கள் என நான்கு பிரிவுகள் உள்ளன. வாயில் உள்ளவர்கள் பிராமணர்கள் என்றும், கரங்களில் உள்ளவர்கள் க்ஷத்திரியர்கள் என்றும், இடுப்பில் உள்ளவர்கள் வைசியர்கள் என்றும், கால்களில் உள்ளவர்கள் சூத்திரர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். விஸ்வ-ரூபம் எனப்படும் பகவானின் இந்த பிரும்மாண்டமான உடலில்தான் எல்லாப் பிரிவினரும் உள்ளனர். எனவே இவர்களில் எந்த பிரிவினரும் இழிவானவரல்லர். நம் உடலிலுள்ள கைகளுக்கும், கால்களுக்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் நாம் காட்டுவதில்லை. உடல் உறுப்புக்களிலேயே வாய் மிகவும் முக்கியமான உறுப்பு என்றாலும் உடலிலுள்ள ஒவ்வொரு அங்கமும் முக்கியமானதுதான். உடலின் மற்ற உறுப்புக்கள் துண்டிக்கப்படுமானால், ஒருவனால் தொடர்ந்து உயிர் வாழ முடியும். ஆனால் வாய் துண்டிக்கப்படுமானால், அவனால் தொடர்ந்து உயிர் வாழ முடியாது.
எனவே பகவானுடைய உடலின் மிக முக்கிய உறுப்பான வாய், வேத ஞானத்தில் நாட்டமுள்ளவர்களான பிராமணர்களுக்கு அமருமிடம் என்று அழைக்கப்படுகிறது. வேத ஞானத்தில் நாட்டம் கொள்ளாமல், பௌதிக விஷயங்களில் நாட்டம் கொண்டிருப்பவன் ஒரு பிராமணத் தந்தைக்கு அல்லது ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தவனாக இருப்பினும், அவனை பிராமணன் என்று அழைக்க முடியாது. ஒரு பிராமணத் தந்தையைப் பெற்றிருப்பதாலேயே ஒருவன் ஒரு பிராமணன் ஆகிவிட முடியாது. ஒரு பிராமணருக்குரிய முக்கிய தகுதி, வேத ஞானத்தில் அவருக்குள்ள நாட்டமாகும். வேதங்கள் பகவானின் வாயில் அமைந்துள்ளன. எனவே வேத ஞானத்தில் நாட்டம் கொண்டுள்ள எவரும் பகவானின் வாயில் அமைந்துள்ள ஒரு பிராமணராவார்.
இந்த வேத ஞானமும் கூட எந்தவொரு குறிப்பிட்ட பிரிவினருக்கு அல்லது சமூகத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல. எந்தக் குடும்பத்தையும், உலகின் எந்தப் பகுதியையும் சேர்ந்த எவரும் வேத ஞானத்தில் நாட்டம் கொள்ளலாம். அது உண்மையான பிராமணருக்குரிய தகுதியை அவருக்கு அளிக்கும்.
உண்மையான பிராமணர் ஒருவர், இயற்கையான ஒரு போதகர் அல்லது ஆன்மீக குரு ஆவார். வேத ஞானத்தைப் பெறாத ஒருவரால் ஓர் ஆன்மீக குரு ஆக முடியாது. பரமபுருஷரை அறிவதுதான் வேதங்களின் நோக்கமாகும். அதுவே வேத ஞானத்தின் முடிவுமாகும் (வேதாந்தம்). அருவபிரம்ம நிலையில் இருந்துகொண்டு, பரமபுருஷ பகவானைப் பற்றிய தகவலை அறியாதிருக்கும் ஒருவர் ஒரு பிராமணர் ஆகலாம், ஆனால் அவரால் ஓர் ஆன்மீக குரு ஆக முடியாது. பத்ம புராணம் கூறுகிறது:
ஷட்-கர்ம நிபுணோ விப்ரோ மந்த்ர-தந்த்ர-விசாரத: அவைஷ்ணவோ குருர் ந ஸ்யாத் வைஷ்ணவ: ஸ்வ-பசோ குரு:
அருவவாதி ஒருவரால் தகுதியுள்ள பிராமணராக ஆக முடியும். ஆனால் ஒரு பகவத் பக்தரின் நிலைக்கு, அல்லது வைஷ்ணவரின் நிலைக்கு அவர் உயர்த்தப்பட்டால் அல்லாது, அவரால் ஓர் ஆன்மீக குருவாக ஆக முடியாது. நவீன காலத்தில் வேத ஞானத்தின் மிகப்பெரிய அதிகாரியான பகவான் ஶ்ரீ சைதன்யர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
கிபா விப்ர, கிபா ஞாஸீ, சூத்ர கேனே நய யேய் க்ருஷ்ண-தத்வ-வேத்தா, ஸேய் ’குரு’ ஹய
ஒருவர் ஒரு பிராமணராகவே அல்லது சூத்திரராகவே அல்லது சந்நியாசியாகவோ இருந்தாலும், கிருஷ்ண விஞ்ஞானத்தில் அவர் நன்கு தேர்ச்சி பெற்றவராக இருந்தால், ஓர் ஆன்மீக குருவாகும் தகுதி அவருக்குண்டு. (சைதன்ய சரிதாம்ருதம் மத்ய 8.128). எனவே தகுதியுள்ள ஒரு பிராமணராக இருப்பது மட்டுமே ஓர் ஆன்மீக குரு ஆவதற்குப் போதுமான தகுதியாகாது. மாறாக கிருஷ்ண விஞ்ஞானத்தை ஒருவர் நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும். வேத ஞானத்தில் தேர்ச்சி பெற்றவர் ஒரு பிராமணராவார். மேலும் ஒரு தூய வைஷ்ணவராகவும், கிருஷ்ண விஞ்ஞானத்தைப் பற்றிய எல்லா நுணுக்கங்களையும் அறிந்துள்ள ஒரு பிராமணரால் மட்டுமே ஓர் ஆன்மீக குரு ஆக முடியும்.
ஶ்ரீமத் பாகவதம் 3.6.30
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆