பத்ப்யாம் பகவதோ ஜக்ஞே சுஸ்ரூஷா தர்ம-ஸித்தயே
தஸ்யாம் ஜாத: புரா சூத்ரோ யத்-வ்ருத்யா துஷ்யதே ஹரி:
மொழிபெயர்ப்பு
அதன்பிறகு, வர்ணாஸ்ரமக் கடமைகளைப் பாதுகாப்பதற்காக, பரமபுருஷரின் கால்களிலிருந்து சேவை தோன்றியது. பகவானின் கால்களில் உள்ள சூத்திரர்கள் அவரைச் சேவையினால் திருப்திப்படுத்துகின்றனர்.
பொருளுரை
சேவை செய்வதுதான் எல்லா ஜீவராசிகளுக்கும் உண்மையான தொழிலாகும். ஜீவராசிகள் பகவானுக்குச் சேவை செய்ய வேண்டியவர்களாவர். இத்தகைய சேவை மனப்பான்மையினால் அவர்களால் சமயப் பூரணத்துவம் பெற முடியும். அனுபவமற்ற அறிவை அடையும் பொருட்டு கற்பனையில் ஈடுபடுவதால் பூரணத்துவத்தை அடைய முடியாது. ஞானிகளின் பிரிவைச் சேர்ந்த ஆன்மீகிகள் ஆத்மாவையும், ஜடத்தையும் பிரித்தறிவதில் மட்டுமே தொடர்ந்து தங்களுடைய கற்பனையைச் செலுத்துகின்றனர். ஆனால் அறிவினால் முக்தி பெற்ற பிறகு ஆத்மாவின் செயல்கள் என்ன என்பதைப் பற்றிய அறிவு அவர்களுக்குக் கிடையாது. விஷயங்களை உள்ளபடி அறிய மனக்கற்பனையில் மட்டும் ஈடுபடுபவர்களும், பகவானின் உன்னத அன்புத்தொண்டில் ஈடுபடாதவர்களும் தங்களுடைய நேரத்தைத்தான் வீணாக்குகின்றனர் என்று கூறப்படுகிறது.
சமய மார்க்கத்தைப் பாதுகாப்பதற்குரிய தொண்டு பகவானின் கால்களிலிருந்து உற்பத்தியானதாக இங்கு தெளிவாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த உன்னத சேவையானது, ஜடவுலகில் சேவை என்று கருதப்படுவதிலிருந்து வேறுபட்டதாகும். ஜடவுலகில் சேவகனாக இருக்க ஒருவரும் விரும்புவதில்லை; ஒவ்வொருவரும் எஜமானனாக இருக்க விரும்புகின்றனர். ஏனெனில் பொய்யான இந்த எஜமானத்துவம்தான் பந்தப்பட்ட ஆத்மாவின் அடிப்படை நோயாகும். பகவானின் புறச்சக்திக்கு அடிமையாகும் அவன் பௌதிக உலகின் சேவகனாக இருக்கும்படி கட்டாயப்படுத்தப்படுகிறான். இதுதான் பந்தப்பட்ட ஆத்மாவின் உண்மை நிலையாகும்.
பகவானுடன் ஒன்றாகிவிட வேண்டும் என்ற எண்ணம் மாயையான புறச்சக்தியினால் விரிக்கப்படும் கடைசி வலையாகும். இத்தகைய எண்ணத்தைக் கொண்ட மாயைக்குட்பட்ட ஆத்மா, தன்னை ஒரு முக்திபெற்ற ஆத்மா என்றும், “நாராயணருக்கு நிகரானவன்” என்றும் பொய்யாக எண்ணிக்கொண்டு ஜட சக்தியின் பந்தத்திலேயே தொடர்ந்து இருக்கிறான். ஒரு பிராமணனாக இருந்து, சேவை மனப்பான்மையை விருத்தி செய்துகொள்ளாமல் இருப்பதை விட, ஒரு சூத்திரனாக இருப்பது நல்லது. ஏனெனில் அத்தகைய மனப்பான்மை மட்டும்தான் பகவானை உண்மையில் திருப்திப்படுத்தும்.
ஒவ்வொரு ஜீவராசியும் (தகுதியில் அவன் ஒரு பிராமணனாக இருப்பினும்) பகவானின் பக்தித் தொண்டை மேற்கொள்ள வேண்டும். இந்த சேவை மனப்பான்மைதான் ஜீவராசியின் உண்மையான பூரணத்துவம் என்பதைப் பகவத்கீதையும், ஶ்ரீமத்-பாகவதமும் உறுதி செய்கின்றன. ஒரு பிராமணர், க்ஷத்திரியர், வைசியர் மற்றும் சூத்திரர் ஆகியோரால், பகவானுக்குத் தொண்டு செய்வதால் மட்டுமே தங்களுடைய வர்ணாஸ்ரமக் கடமைகளைப் பூரணமானதாகச் செய்துகொள்ள முடியும். பிராமணரொருவர் வேத ஞானத்தில் பக்குவம் பெற்றவராக இருப்பதால் இவ்வுண்மையை அறிந்திருக்க வேண்டியவராவார். மற்ற பிரிவினர்கள் பிராமண வைஷ்ணவர்களின் வழிகாட்டலைப் பின்பற்ற வேண்டும். பிராமண வைஷ்ணவரொருவர் தகுதியால் ஒரு பிராமணராகவும், செயலால் ஒரு வைஷ்ணவராகவும் இருக்கிறார். மக்கள் சமுதாயத்தின் சமூக அமைப்பு முறையை இது பூரணத்துவம் உடையதாகச் செய்யும். ஒழுங்கற்ற ஒரு சமூகத்தால் சமூக அங்கத்தினர்களையோ அல்லது பகவானையோ திருப்திப்படுத்த முடியாது.
ஒருவன் நல்லதொரு பிராமணனாகவோ, க்ஷத்திரியனாகவோ, வைசியனாகவோ அல்லது சூத்திரனாகவோ இருப்பினும், தனது சமூகக் கடமையில் பக்குவம் அடைவதைப் பற்றிக் கவலைப்படாமல், பகவானின் தொண்டை மேற்கொள்வானாயின், பரமபுருஷரிடம் இந்த சேவை மனப்பான்மையை விருத்தி செய்துகொள்வதன் மூலமாகவே, அவன் ஒரு பக்குவமுடைய மனிதனாகிவிடுகிறான்.
(ஶ்ரீமத்-பாகவதம் காண்டம் 3.6.33)
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆