ந யத் வசஸ் சித்ர-பதம் ஹரேர் யசோ
ஜகத்-பவித்ரம் ப்ரக்ருணீத கர்ஹிசித்
தத் வாயஸம் தீர்தம் உசந்தி மானஸா
ந யத்ர ஹம்ஸா நிரமந்தி உசிக்-க்ஷயா:
மொழிபெயர்ப்பு
பிரபஞ்சத்தின் முழு சூழ்நிலையையும் தூய்மைப்படுத்தக்கூடியவர் பகவான் ஒருவரேயாவார். அவரது பெருமைகளை விவரிக்காத அந்த சொற்கள் காக்கைகளைப் போன்ற கர்மிகளின் தீர்த்தம் என்று புண்ணிய புருஷர்களால் கருதப்படுகின்றன. பூரணத்துவம் பெற்றவர்கள் பரலோகவாசிகளாக இருப்பதால், காக்கைகளுக்குரிய இடத்தில் அவர்கள் எவ்வித இன்பத்தையும் பெறுவதில்லை.
பொருளுரை
காகங்களும் அன்னப் பறவைகளும் மன வேறுபாடு கொண்டவை என்பதால் அவை ஒரே இனத்தைச் சேர்ந்த பறவைகள் அல்ல. பலனை எதிர்பார்த்து செயற்படுபவர்கள் (கருமிகள்) காகங்களோடு ஒப்பிடப்படுகின்றனர். ஆனால் பூரணத்துவம் பெற்ற புண்ணியவான்கள் அன்னப் பறவைகளோடு ஒப்பிடப்படுகின்றனர். கருமிகள் மதுவிலும், மங்கையிலும், புலன் நுகர்விலும் இன்பம் பெறுவதைப் போலவே, வெளியில் வீசப்படும் குப்பைகள் இருக்கும் இடத்தில் காகங்கள் இன்பம் பெறுகின்றன. காகங்கள் கூடும் இடங்களில் அன்னப் பறவைகள் இன்பம் அடைவதில்லை. மாறாக, பல நிறங்களையும், இயற்கை அழகையும் கொண்ட தாமரைத் தண்டுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள தெளிந்த நீர்த்தேக்கங்களிலும் அவற்றின் இயற்கை அழகுமிக்க சூழ்நிலைகளிலுமே அவை காணப்படுகின்றன. இந்த இரு வகையான பறவைகளுக்கும் உள்ள வேறுபாடு இதுதான்.
வெவ்வேறு உயிரினங்களை இயற்கை வேறுபட்ட மனோபாவங்களுடன் படைக்கிறது. அவற்றை ஒரே நிலைக்கும், தரத்திற்கும் உயர்த்துவதென்பது இயலாத காரியமாகும்.
அதைப் போலவே, வெவ்வேறு மனப்போக்குகளைக் கொண்ட வேறுபட்ட மனிதர்களுக்கு ஏற்ப வெவ்வேறு வகையான இலக்கியங்களும் உள்ளன. காகங்களின் மனப்போக்கைக் கொண்டவர்களைக் கவரும் கடைத்தெரு இலக்கியங்கள், பெரும்பாலும் புலன்களை பாதிக்கக்கூடிய, வெறுத்து ஒதுக்கப்பட்ட இலக்கியங்களாகும். அவை பொதுவாக ஸ்தூல உடல் மற்றும் சூட்சும மனம் ஆகியவற்றைப் பற்றிய பௌதிக விஷயங்களாகும். அவை பௌதிக உவமைகள் மற்றும் உருவகங்கள் ஆகியவற்றைக் கொண்ட, அலங்கார மொழியில் விவரிக்கப்பட்டுள்ள விஷயங்களைக் கொண்டவையாகும். மேலும் அவை பகவானை போற்றிப் புகழ்பவையாக இல்லை. இத்தகைய காவியங்களும், வசனங்களும், எந்த விஷயத்தைப் பற்றியவையாக இருப்பினும், அவை உயிரற்ற உடலின் அலங்காரங்களாகவே கருதப்படுகின்றன. ஆன்மீகத்தைத் துறந்தவர்கள் இத்தகைய இழிவான இலக்கியங்களில் இன்பம் பெறுகின்றனர். அன்னப் பறவைகளோடு ஒப்பிடப்படும் ஆன்மீக முன்னேற்றம் அடைந்தவர்கள் இவற்றில் இன்பம் பெறுவதில்லை. ரஜோ மற்றும் தமோ குணங்களில் உள்ள இந்த இலக்கியங்கள் வெவ்வேறு பெயர்களின் கீழ் விநியோகிக்கப்படுகின்றன. ஆனால் மனிதனின் ஆன்மீக முன்னேற்றத்திற்கு அவற்றால் உதவ முடியாது. எனவே அன்னப் பறவையைப் போன்றவர்களான ஆன்மீக முன்னேற்றம் அடைந்தவர்கள் அவற்றுடன் எந்த தொடர்பையும் வைத்துக் கொள்வதில்லை. இத்தகைய ஆன்மீக முன்னேற்றம் பெற்றவர்கள் எப்பொழுதும் பகவானின் உன்னத அன்புத் தொண்டின் தரத்தை தெய்வீக நிலையிலேயே வைத்துக் காப்பாற்றுவதால் இவர்கள் ‘மனஸ’ என்று அழைக்கப்படுகின்றனர். தீவிரமான புலன் இன்பத்தையும், சூட்சுமமான மனக் கற்பனையையும் நோக்கமாகக் கொண்ட பலன் கருதும் செயல்களை, பகவானின் அன்புத் தொண்டு முற்றிலும் தடை செய்கிறது.
சமூகத்திலுள்ள கற்றறிந்தவர்கள், விஞ்ஞானிகள், இகலோக கவிஞர்கள், அனுபவமற்ற தத்துவவாதிகள் மற்றும் புலன் இன்பத்திற்கான பௌதிக முன்னேற்றத்தில் முற்றிலும் ஆழ்ந்துள்ள அரசியல்வாதிகள் ஆகிய அனைவரும் ஜட சக்தியின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ள பொம்மைகளேயாவர். பயனற்ற விஷயங்கள் எறியப்படும் இடத்தில் இவர்கள் ஆனந்தம் கொள்கின்றனர். இது காம வேட்டையில் ஈடுபட்டுள்ளவர்களின் ஆனந்தத்தைப் போன்றதாகும் என்று ஸ்ரீதர் சுவாமி கூறுகிறார்.
ஆனால் மனித வாழ்வின் நோக்கத்தை அறிந்துள்ள பரமஹம்ஸர்கள், பகவானின் பெருமைகளை விவரிக்கும் இலக்கியங்களை சுவைத்து மகிழ்கின்றனர்.
(ஸ்ரீமத் பாகவதம் 1.5.10)
ஶ்ரீமத் பாகவதம் 1.5.10 — முக்கியக் கருத்துகளின் சுருக்கம்
பகவானின் தூய்மைப்படுத்தும் தன்மை: பிரபஞ்சத்தின் முழு சூழ்நிலையையும் தூய்மைப்படுத்தக்கூடிய வல்லமை படைத்தவர் பகவான் ஒருவரே ஆவார்.
காகங்களின் தீர்த்தம்: பகவானின் பெருமைகளை விவரிக்காத சொற்கள் மற்றும் இலக்கியங்கள், காகங்களைப் போன்ற கர்மிகள் கூடும் தூய்மையற்ற தீர்த்தத்திற்கு ஒப்பானவை என்று புண்ணிய புருஷர்களால் கருதப்படுகின்றன.
அன்னப் பறவைகளின் இயல்பு: பூரணத்துவம் பெற்ற பரமஹம்ஸர்கள் ஆன்மீக உலகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், காகங்களுக்குரிய கீழான பௌதிக இடங்களில் அவர்கள் எவ்வித இன்பத்தையும் பெறுவதில்லை.
மனோபாவ வேறுபாடு: காகங்களும் அன்னப் பறவைகளும் வெவ்வேறு மனோபாவம் கொண்டவை; அதனால் அவை ஒரே இனத்தைச் சேர்ந்தவை அல்ல.
கர்மிகளும் காகங்களும்: பலனை எதிர்பார்த்துச் செயல்படும் கர்மிகள் காகங்களுக்கு ஒப்பானவர்கள்; அவர்கள் மது, மங்கை மற்றும் புலன் நுகர்வுகளாகிய குப்பைகள் நிறைந்த இடங்களிலேயே இன்பம் காண்கின்றனர்.
பரமஹம்ஸர்களும் அன்னங்களும்: பூரணத்துவம் பெற்ற ஆன்மீகவாதிகள் அன்னப் பறவைகளுக்கு ஒப்பானவர்கள்; அவர்கள் தெளிந்த நீரும், அழகிய தாமரை மலர்களும் கொண்ட இயற்கை எழில்மிக்க நீர்நிலைகளிலேயே காணப்படுகின்றனர்.
இலக்கியங்களின் தரம்: மனிதர்களின் வெவ்வேறு மனப்போக்குகளுக்கு ஏற்ப இலக்கியங்களும் வேறுபடுகின்றன. காகத்தின் மனோபாவம் கொண்டவர்களைக் கவரும் கடைத்தெரு இலக்கியங்கள், ஸ்தூல உடல் மற்றும் சூட்சும மனம் சார்ந்த பௌதிக விஷயங்களாகும்.
உயிரற்ற உடலின் அலங்காரம்: பகவானைப் போற்றிப் புகழாத காவியங்களும் வசனங்களும், எவ்வளவு அலங்கார மொழியில் விவரிக்கப்பட்டிருந்தாலும், அவை உயிரற்ற பிணத்தை அலங்கரிப்பதற்குச் சமமானவையே ஆகும்.
ரஜோ-தமோ குண இலக்கியங்கள்: ரஜோ மற்றும் தமோ குணங்களில் உருவாக்கப்படும் பௌதிக இலக்கியங்களால் மனிதனின் ஆன்மீக முன்னேற்றத்திற்கு எந்த உதவியும் செய்ய முடியாது.
‘மனஸ’ என்பதன் பொருள்: ஆன்மீக முன்னேற்றம் அடைந்தவர்கள் எப்போதும் பகவானின் உன்னத அன்புத் தொண்டின் தரத்தை தெய்வீக நிலையிலேயே வைத்துக் காப்பாற்றுவதால், அவர்கள் ‘மனஸ’ என்று அழைக்கப்படுகின்றனர்.
ஜட சக்தியின் பொம்மைகள்: சமூகத்திலுள்ள கற்றறிந்தவர்கள், விஞ்ஞானிகள், கவிஞர்கள், அனுபவமற்ற தத்துவவாதிகள் மற்றும் அரசியல்வாதிகள் அனைவரும் ஜட சக்தியின் பிடியில் சிக்கியுள்ள பொம்மைகளே ஆவார்; இவர்கள் கழிவுகள் எறியப்படும் இடத்தில் ஆனந்தம் கொள்கின்றனர்.
பரமஹம்ஸர்களின் உன்னத ரசனை: மனித வாழ்வின் உண்மையான நோக்கத்தை அறிந்த பரமஹம்ஸர்கள், பகவானின் பெருமைகளை விவரிக்கும் ஆன்மீக இலக்கியங்களை மட்டுமே சுவைத்து மகிழ்கின்றனர்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆