பகவான் ஜெகந்நாதரின் அபிஷேக திருவிழா (ஸ்நான யாத்திரை) எப்பொழுது நடைபெறும் என்று ஸார்வபௌம பட்டாச்சாரியரிடம் மன்னர் பிரதாபருத்ரர் வினவியபோது, அதற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன என்று பட்டாச்சாரியர் பதிலளித்தார். மன்னருக்கு இவ்வாறு ஊக்கமளித்துவிட்டு, ஸார்வபௌம பட்டாச்சாரியர் தமது இல்லத்திற்குத் திரும்பினார். பகவான் ஜெகந்நாதரின் ஸ்நான யாத்திரை நாளன்று, ஶ்ரீ சைதன்ய மஹாபிரபு இதயத்தில் மிக்க மகிழ்ச்சியுடன் இருந்தார். பகவான் ஜெகந்நாதரின் ஸ்நான யாத்திரையைக் கண்டு, ஶ்ரீ சைதன்ய மஹாபிரபு பெரிதும் மகிழ்ச்சியுற்றார். ஆனால் அந்த விழாவிற்குப் பிறகு பகவான் ஜெகந்நாதர் ஓய்வெடுத்த காலத்தில், அவரை காண இயலாததால் ஶ்ரீ சைதன்ய மஹாபிரபு மிகவும் வருத்தமுற்றார்.
ரத யாத்திரை திருவிழாவிற்குப் 15 நாட்கள் முன்பாக நடைபெறும் ஶ்ரீ ஜெகந்நாதர் ஸ்நான யாத்திரை நிகழ்ச்சிக்குப் பின்னர், ஜெகந்நாத விக்கிரகத்தின் திருமேனியில் மீண்டும் வண்ணம் தீட்டப்படுகிறது. இது முடிவுறுவதற்கு சுமார் 15 நாட்கள் ஆகின்றது. இந்த காலமானது “அனவஸர” என்று சொல்லப்படுகிறது. பகவான் ஜெகந்நாதரை தினமும் தரிசிப்பதற்காக தினமும் கோயிலுக்குச் செல்பவர்கள் பலர் உள்ளனர். ஸ்நான யாத்திரைக்கு பின்னர் வரக்கூடிய ஜெகந்நாதனின் ஓய்வுக்காலம் அவர்களுக்குத் தாங்கவியலாததாக அமைகிறது. கோயிலில் பகவான் ஜெகந்நாதருடைய தரிசனம் இல்லாததால் ஶ்ரீ சைதன்ய மஹாபிரபு மிகவும் வருந்தினார். கிருஷ்ணரின் பிரிவில் கோபியர்கள் உணர்ந்த அதே வருத்தத்தினை ஜெகந்நாதரின் பிரிவினால் ஶ்ரீ சைதன்ய மஹாபிரபு உணர்ந்தார். இந்நிலையில் அவர் தமது சங்கத்தினர்கள் அனைவரையும் கைவிட்டு ஆலாலநாத் கோவிலுக்கு சென்றார். (ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் மத்ய லீலை 11.60 – 63)
ஜெகந்நாதர் தமது கோயிலிலிருந்து விலகியிருந்த காலகட்டத்தில், அவரைக் காண இயலாமல் பிரிவை உணர்ந்த ஶ்ரீ சைதன்ய மஹாபிரபு ஜெகந்நாத புரியை விட்டு வெளியேறி ஆலாலநாத் என்று அறியப்படும் இடத்திற்குச் சென்றார்.
ஆலாலநாத் என்பது பிரம்மகிரி என்றும் அறியப்படுகிறது. இவ்விடம் ஜெகந்நாத புரியிலிருந்து கடற்கரையில் 14 மைல் தொலைவில் உள்ளது. அங்கு அலர்நாதரின் கோயில் ஒன்று உள்ளது. தற்போது பல்வேறு மக்களும் கோயிலைக் காண வருவதால், அங்கு ஒரு காவல் நிலையமும் அஞ்சல் நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீ ஜெகந்நாதரை கோயிலில் தரிசிக்க முடியாத காலகட்டத்திற்கு “அனவஸர” என்னும் சொல் உபயோகிக்கப்படுகிறது. ஸ்நான யாத்திரை எனப்படும் அபிஷேக நிகழ்ச்சிக்குப் பின்னர் பகவான் ஜெகந்நாதர் நோய்வாய்ப்படுவதாக கருதப்படுவது ஐதீகம். அதனால் அவர் அந்தரங்க அறைக்கு எடுத்துச் செல்லப்படுகிறார்; அங்கு அவரை யாராலும் காண இயலாது. உண்மையில், இக்காலகட்டத்தின் போது, ஜெகந்நாதரின் திருமேனி புதுப்பிக்கப்படுகிறது; இது “நவ-யௌவன” எனப்படுகிறது. ரத யாத்திரை நிகழ்ச்சியின்போது, பகவான் ஜெகந்நாதர் மீண்டும் பொதுமக்களின் பார்வைக்கு வருகிறார். இவ்வாறாக ஸ்நான யாத்திரைக்குப் பின்னர் 15 நாட்கள் பகவான் ஜெகந்நாதர் எந்த யாத்திரிகர்களுக்கும் தரிசனம் வழங்குவதில்லை.(ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் மத்ய லீலை 1.22)
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆