பாகவத தர்மம், மிகவும் இரகசியமான சமயக் கோட்பாடாகும் (ஸர்வ-குஹ்யதமம், குஹ்யாத், குஹ்யதரம்) என்று பகவத் கீதையில் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் குறிப்பிடுகிறார்.
ஶ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கூறுகிறார், “நீ எனக்குப் பிரிய நண்பன் என்பதால், மிகவும் இரகசியமான சமயத்தை உனக்கு நான் விளக்கிக் கொண்டிருக்கிறேன்.” ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ: மற்றெல்லாக் கடமைகளையும் விட்டுவிட்டு என்னிடம் சரணடைவாயாக.” இக்கோட்பாட்டைப் புரிந்து கொள்வது மிகவும் அரிது என்றால், இதனால் என்ன பயன்? என்று ஒருவர் கேட்கக் கூடும். இதற்கு யமராஜன் பின்வருமாறு பதிலளித்தார். பிரம்ம தேவர், சிவ பெருமான், நான்கு குமாரர்கள் முதலானவர்களின் பரம்பரா முறையைப் பின்பற்றுபவனால் இந்த சமயக் கோட்பாட்டைப் புரிந்துகொள்ள முடியும். நான்கு சீடப் பரம்பரைகள் உள்ளன: ஒன்று பிரம்ம தேவரிலிருந்து வருகிறது, இரண்டாவது சிவபெருமானிலிருந்து வருகிறது, மூன்றாவது லக்ஷ்மி தேவியிலிருந்து வருகிறது, நான்காவது குமாரர்களிடமிருந்து வருகிறது. பிரம்ம தேவரிலிருந்து வரும் சீடப்பரம்பரை பிரம்ம-சம்பிரதாயம் என்றும், சிவ பெருமானிலிருந்து வருவது ருத்ர-சம்பிரதாயம் என்றும், லக்ஷ்மி தேவியிலிருந்து வருவது ஶ்ரீ-சம்பிரதாயம் என்றும், குமாரர்களிலிருந்து வருவது குமார-சம்பிரதாயம் என்றும் அழைக்கப்படுகின்றன. மிகவும் இரகசியமான சமய முறையைப் புரிந்து கொள்வதற்கு ஒருவன், இந்நான்கு சம்பிரதாயங்களுள் ஒன்றைத் தஞ்சமடைய வேண்டும். பத்ம புராணம் கூறுகிறது, ஸம்ப்ரதாய-விஹீனா யே மந்த்ராஸ் தே நிஷ்ஃபலா மதா: ஒருவன் அங்கீகரிக்கப்பட்டுள்ள நான்கு சீடப் பரம்பரைகளைப் பின்பற்றாவிடில், அவனுடைய தீட்சை அல்லது தீட்சை மந்திரம் பயனற்றதாகும். இன்று பல அபஸம்பிரதாயங்கள் உள்ளன. அதாவது, அங்கீகரிக்கப்படாதவையும், பிரம்ம தேவன், சிவ பெருமான், குமாரர்கள் அல்லது லக்ஷ்மியைப் போன்ற அதிகாரிகளுடன் பாரம்பரியத் தொடர்பு இல்லாத பல சம்பிரதாயங்கள் இன்று முளைத்துள்ளன. இத்தகைய அபஸம்பிரதாயங்களால் மக்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர். இத்தகைய சம்பிரதாயங்களில் தீட்சை பெறுவது பயனற்ற கால விரயமாகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஏனெனில், ஒருவன் உண்மையான சமயக் கோட்பாட்டைப் புரிந்து கொள்வதற்கு இது ஒருபோதும் உதவாது. – ( ஶ்ரீமத் பாகவதம் 6.3.21-22 / பொருளுரை )
பிரம்ம-மத்வ-கௌடீய சம்பிரதாயம்
பிரம்ம தேவர் நாரத முனிவரின் குருவாவார். நாரதர் வியாச தேவரின் குரு, வியாசதேவர் மத்வாசாரியரின் குரு. இவ்வாறாக இந்த கௌடீய-மத்வ சம்பிரதாயம் நாரத முனிவரின் சீடப் பரம்பரை மூலமாக வருகிறது. இந்த சீடப் பரம்பரையின் அங்கத்தினர்கள் அதாவது, கிருஷ்ண பக்தி இயக்கத்தின் அங்கத்தினர்கள் நாரத முனிவரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே / ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே என்ற திவ்ய மந்திரத்தைப் பாடிப் பரப்ப வேண்டும். அவர்கள் எல்லா இடங்களுக்கும் சென்று, ஹரே கிருஷ்ண மந்திரத்தைப் பாடுவதன் மூலமும், பகவத்கீதை, ஶ்ரீமத் பாகவதம், மற்றும் சைதன்ய சரிதாம்ருதம் ஆகியவற்றை உபந்நியாஸம் செய்வதன் மூலமும், வீழ்ந்த ஆத்மாக்களைக் கடைத்தேற்ற வேண்டும். இது பரமபுருஷரை மிகவும் திருப்திப்படுத்தும். நாரத முனிவரின் உபதேசங்களை உண்மையாகப் பின்பற்றுபவனால் ஆன்மீக முன்னேற்றத்தை அடைய முடியும். நாரத முனிவரை ஒருவன் திருப்திப்படுத்தினால், பரமபுருஷராகிய ரிஷீகேசரும் திருப்தியடைவார் (யஸ்ய ப்ரஸாதாத் பகவத்-ப்ரஸாதோ). இப்போதுள்ள ஆன்மீக குரு நாரத முனிவரின் பிரதிநிதியாவார்; நாரதரின் உபதேசங்களுக்கும், தற்போதுள்ள ஆன்மீக குருவின் உபதேசங்களுக்கும் எந்த வேறுபாடுமில்லை. நாரத முனிவர், தற்போதைய ஆன்மீக குரு ஆகிய இருவருமே ஶ்ரீ கிருஷ்ணரின் அதே போதனைகளைத்தான் உபதேசிக்கின்றனர். ஶ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் (18.65-66) கூறுகிறார்:
மன்-மனா பவ மத்-பக்தோ மத்-யாஜீ மாம் நமஸ்குரு
மாம் ஏவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜானே ப்ரியோ ‘ஸி மே
ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வாம் ஸர்வ-பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச:
“எப்பொழுதும் என்னைப் பற்றியே நினைத்துக் கொண்டு என் பக்தனாய் ஆவாயாக. என்னை வழிபட்டு, உனது வணக்கத்தை எனக்குச் சமர்ப்பிப்பாயாக. இவ்விதமாக நீ தவறாது என்னிடம் வந்து சேருவாய். நீ எனது பிரிய நண்பனென்பதால், உனக்கு இந்த வாக்குறுதியை நான் அளிக்கிறேன். எல்லா வகையான மதங்களையும் துறந்து, என்னிடமே சரணடைவாயாக. உன்னை எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் நான் விடுவிக்கிறேன். பயப்படாதே.” (ஶ்ரீமத் பாகவதம் 6.5.22 / பொருளுரை)
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆