பத்ம புராணத்தில் கூறப்பட்டுள்ள ஸ்ரீமத் பகவத்கீதை மகாத்மியம்: முதல் அத்தியாயம்
பார்வதி தேவி சிவபெருமானிடம் பின்வருமாறு வினவினாள்: “என் அன்பிற்குரிய பிரபு! தாங்கள் அனைத்து உன்னத உண்மைகளையும் அறிந்தவர். தங்களின் கருணையால் புருஷோத்தமனான ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் திவ்ய மகிமைகளைக் கேட்டு மகிழ்ந்தேன். சுவாமி! இப்போது அதே ஸ்ரீ கிருஷ்ணர் அருளிச்செய்த ஸ்ரீமத் பகவத்கீதையின் பெருமைகளைத் தங்களிடமிருந்து கேட்க ஆவல் கொள்கிறேன். எதனைச் செவிமடுப்பதன் மூலம் ஒருவருக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பக்தி அதிகரிக்குமோ, அதனை எனக்குக் கூறியருளுங்கள்.”
பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் உன்னதத் தோற்றம்
அதற்கு சிவபெருமான் இவ்வாறு பதிலளித்தார்: “யார் ஒருவருடைய திருமேனி கார்மேகம் போன்ற நிறத்தைக் கொண்டுள்ளதோ, யாருக்குப் பறவைகளின் அரசனான கருடன் வாகனமாக இருக்கிறானோ, யார் ஆயிரம் தலைகளையுடைய அனந்த சேஷன் மேல் பள்ளி கொண்டுள்ளாரோ, அந்த எல்லையற்ற மகிமைகளைக் கொண்ட பகவான் விஷ்ணுவை நான் எப்போதும் வழிபடுகிறேன்.
என் அன்பிற்குரிய பார்வதி! முன்னொரு சமயம் பகவான் விஷ்ணு, முரன் என்ற அசுரனை அழித்த பிறகு, பாற்கடலில் அனந்த சேஷன் மீது அமைதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அகிலத்தின் மங்கலங்களுக்கு உறைவிடமான ஸ்ரீ லட்சுமி தேவி, பகவானிடம் மிகுந்த மரியாதையுடன் ஒரு வினாவை முன்வைத்தாள்.”
ஸ்ரீ லட்சுமி தேவியின் வினா
லட்சுமி தேவி வினவினார்: “பகவானே! தாங்கள் இந்த முழு அண்டத்தையும் கட்டுப்படுத்துபவர்; பராமரிப்பவர். அப்படியிருக்க, இந்தப் பாற்கடலில் தாங்கள் ஏதோ சிந்தனையுடன் துயில் கொள்வது போலத் தோன்றுவதன் காரணம் என்ன?”
.
அதற்கு பகவான் விஷ்ணு பதிலளித்தார்: “என் அன்பிற்குரிய லட்சுமி! நான் உறங்கவில்லை. மாறாக, என்னுடைய ஆற்றல்கள் எவ்வளவு அற்புதமாக இயங்குகின்றன என்பதை நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய இந்த வியக்கத்தக்க ஆற்றலைக் கொண்டே நான் அனைத்தையும் ஆளுகிறேன்; இருப்பினும் நான் அவற்றிலிருந்து தனித்தே இருக்கிறேன். என்னுடைய இத்தகைய திவ்யமான லீலைகளைத் தியானிப்பதன் மூலமே, மாபெரும் பக்தர்களும் யோகிகளும் பிறப்பு-இறப்பு என்னும் சம்சாரச் சக்கரத்திலிருந்து விடுபட்டு, முக்குணங்களைக் கடந்த நித்தியமான எனது உன்னதத் வாசஸ்தலமான வைகுண்டத்தை அடைகிறார்கள்.”
பிரபஞ்சத்தின் மூலமும் இறைவனின் யோகமும்
லக்ஷ்மி தேவி தொடர்ந்தார்: “அனைத்தையும் ஆள்பவரே! மாபெரும் யோகிகளின் தியானத்திற்கு இலக்கானவர் நீங்களே. உங்களின் கருணையின்றி எதுவும் இயங்காது. இருப்பினும் நீங்கள் பற்றற்றுத் தனித்திருக்கிறீர்கள். ஜட அண்டங்களின் படைப்பு, காப்பு மற்றும் அழிவிற்குத் தாங்களே மூலகாரணம். உங்களுடைய வியக்கத்தக்க ஆற்றல்களின் செயல்பாடுகளைப் பற்றி எனக்கு விளக்குங்கள். தங்களின் அந்த ஆற்றல்கள் மங்கலம் பொருந்தியவை மற்றும் வசீகரமானவை; உங்களின் ஆற்றல்களின் வசீகரத்தால் தான் நீங்களும் அவற்றையே தியானம் செய்துகொண்டிருக்கிறீர்களோ!”
ஸ்ரீமத் பகவத்கீதையின் திவ்ய வடிவம்
பகவான் விஷ்ணு தொடர்ந்து கூறினார்: ““என் பிரியமான தேவியே! என்னுடைய பலதரப்பட்ட ஆற்றல்களின் செயல்பாடுகளையும், பிறப்பு-இறப்பு எனும் இந்த வாழ்க்கைச் சக்கரத்திலிருந்து விடுபட்டு, எனது நித்திய உறைவிடமான வைகுண்டத்தை எப்படி அடைவது என்பதையும், தூய புத்தியுடனும் எனக்குத் தொண்டு செய்யும் ஆர்வம் கொண்ட ஒரு பக்தரால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். இந்த உன்னத ஞானமானது ஸ்ரீமத் பகவத்கீதையில் முழுமையாக விளக்கப்பட்டிருக்கிறது.”
லக்ஷ்மி தேவி வினவினார்: “எனது அன்பிற்குரிய பிரபு! உங்களது ஆற்றல்களின் செயல்பாடுகளைக் கண்டு நீங்களே வியப்படைகிறீர்கள்; அவற்றின் எல்லையை அறிய நீங்களே எப்போதும் முயல்கிறீர்கள். அப்படியிருக்க, அந்த அனந்தமான ஆற்றல்களைப் பற்றியும், அந்த மாயையைக் கடந்து உன்னத நிலையை அடைவது பற்றியும் பகவத்கீதை எவ்வாறு விவரிக்க முடியும்?”
பகவான் விஷ்ணு கூறினார்:
“என் பிரியமான தேவியே! நானே பகவத்கீதையின் வடிவில் திவ்விய சொரூபமாக வெளிப்பட்டுள்ளேன் என்பதை நீ அறிவாய். இதன் முதல் ஐந்து அத்தியாயங்கள் எனது திருமுடிகளாகவும் , அடுத்த பத்து அத்தியாயங்கள் எனது கரங்களாகவும், பதினாறாவது அத்தியாயம் எனது திருவயிறாகவும், இறுதி இரண்டு அத்தியாயங்கள் எனது தாமரைத் திருவடிகளாகவும் விளங்குகின்றன.
இவ்வாறாக, பகவத்கீதையை எனது திவ்விய சொரூபமாகவே நீ கருத்தில் கொள்ள வேண்டும். இந்த பகவத்கீதை அனைத்துப் பாவங்களையும் நிவர்த்தி செய்யக்கூடியது. ஒரு மனிதன் தினமும் ஒரு அத்தியாயத்தையோ, அல்லது ஒரு சுலோகத்தையோ, அதன் பாதியையோ, அல்லது ஒரு கால் பகுதியையாவது பாராயணம் செய்தால், அவன் சுசர்மா அடைந்த அதே உன்னத நிலையை அடைவான்.”
சுசர்மாவின் வரலாறு
லட்சுமி தேவி கேட்டாள்: “அந்த சுசர்மா என்பவர் யார்? அவர் எந்தக் குலத்தைச் சேர்ந்தவர்? அவர் எத்தகைய கதியை அடைந்தாரோ அதனை விளக்குங்கள் பிரபு?”
பகவான் விஷ்ணு கூறினார்: “என் பிரியமான தேவியே! சுசர்மா என்பவன் மிகவும் கொடியவனாகவும், பாவ காரியங்களிலேயே ஈடுபாடு கொண்டவனாகவும் இருந்தான். அவன் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், அவனது குடும்பத்திற்கு வேத ஞானம் ஏதும் இல்லை. மற்றவர்களுக்குத் துன்பம் விளைவிப்பதிலேயே அவன் இன்பம் கண்டான். அவன் ஒருபோதும் எனது நாமங்களை உச்சரிக்கவில்லை; தான தருமங்களோ, விருந்தோம்பலோ செய்யவில்லை. உண்மையில், அவன் எந்தவொரு புண்ணியச் செயலையும் செய்ததில்லை.
தனது பிழைப்பிற்காகக் காட்டில் இலைகளைச் சேகரித்து சந்தையில் விற்று வந்தான். மது அருந்துவதிலும் மாமிசம் உண்பதிலுமே அவன் காலத்தைக் கழித்தான். இவ்வாறாக அவன் தனது வாழ்நாளை வீணடித்தான்.”
சுசர்மாவின் வீழ்ச்சியும் மாற்றமும்
“ஒரு நாள் அந்த மூடன் சுசர்மா, இலைகளைச் சேகரிப்பதற்காக ஒரு முனிவரின் நந்தவனத்திற்குச் சென்றான். அப்போது அங்கிருந்த ஒரு நாகம் அவனைத் தீண்டியதால் அவன் உயிர் துறந்தான். அவனது மரணத்திற்குப் பின், அவன் பல நரகங்களுக்கு அனுப்பப்பட்டு நீண்ட காலம் துயருற்றான். அதன் பிறகு, அவன் ஒரு எருதின் உடலை அடைந்தான்.
அந்த எருதை ஒரு முடவன் விலைக்கு வாங்கி, அதனிடம் வேலை வாங்கினான். சுமார் ஏழு அல்லது எட்டு ஆண்டுகள் அந்த எருது தாங்க முடியாத சுமையினைச் சுமந்து திரிந்தது. ஒரு நாள் அந்த முடவன் எருதின் முதுகில் பெரும் பாரத்தை ஏற்றி, அதனை வேகமாக இழுத்துச் சென்றான். அப்போது திடீரென அந்த எருது மயங்கி கீழே விழுந்தது. அங்கே கூடியிருந்த பலர் அந்த எருதின் நிலையைக் கண்டு பரிதாபப்பட்டனர்.
அக்கூட்டத்தில் இருந்த ஒரு புண்ணியவான், தான் செய்த ஏதோ ஒரு நற்செயலின் பலனை அந்த எருதிற்கு அர்ப்பணித்தார். அதைக் கண்ட மற்றவர்களும் தங்களுக்குத் தெரிந்த புண்ணியப் பலன்களை அந்த எருதிற்கு வழங்கினர். அங்கே ஒரு விலைமாதும் நின்றிருந்தாள். தான் ஏதேனும் புண்ணியம் செய்திருக்கிறோமா என்று கூட அவளுக்குத் தெரியாது. இருப்பினும் மற்றவர்கள் வழங்குவதைக் கண்டு, அவளும் தான் செய்திருக்கக்கூடிய புண்ணியப் பலன்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை அந்த எருதிற்கு வழங்கினாள். அதன் பிறகு அந்த எருது உயிர் நீத்து, தர்மராஜனான யமராஜனின் உலகிற்கு அழைத்துச் செல்லப்பட்டது.”
சுசர்மாவின் விமோசனமும் மறுபிறவியும்
யமலோகத்தில், தர்மராஜனான யமதேவன் சுசர்மாவிடம் இவ்வாறு கூறினார்: “அந்த விலைமாது உனக்கு அளித்த புண்ணியப் பலன்களினால், உன்னுடைய முந்தைய அனைத்து பாவ விளைவுகளிலிருந்தும் நீ இப்போது விடுபட்டுவிட்டாய்.” அதன் பின்னர், அவன் ஒரு உயர்ந்த பிராமணக் குடும்பத்தில் மறுபிறவி எடுத்தான். அந்தப் பிறவியில், அவனுக்குத் தன் கடந்த கால வாழ்க்கையை நினைவுகூரும் ஆற்றல் இருந்தது. சில காலத்திற்குப் பிறகு, நரக வேதனையிலிருந்து தன்னை விடுவிக்கக் காரணமாக இருந்த அந்தப் பெண்ணைத் தேடிக் கண்டறிய அவன் முடிவு செய்தான்.
சுசர்மா அந்தப் பெண்ணைக் கண்டுபிடித்து, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். பின் அவளிடம், “மதிப்பிற்குரிய அம்மையே! எந்தப் புண்ணியச் செயலின் பலனை நீங்கள் எனக்கு அளித்தீர்களோ, அதன் மூலம் நான் நரகத் துயரிலிருந்து விடுபட்டேன். அப்படி நீங்கள் செய்த அந்த நற்செயல் யாது?” என்று வினவினான்.
அதற்கு அந்தப் பெண், “ஐயா! அந்தக் கூண்டில் ஒரு கிளி இருக்கிறது பாருங்கள், அது தினமும் ஏதோ ஒன்றை உச்சரித்துக் கொண்டே இருக்கும். அந்த ஓசையைக் கேட்பதனால் என் இதயம் முற்றிலும் தூய்மையடைந்தது. அதனைச் செவிமடுத்ததால் எனக்குக் கிடைத்த புண்ணியப் பலன்களையே நான் அன்று உங்களுக்கு அளித்தேன்” என்று பதிலளித்தாள்.
கிளியின் பூர்வ ஜென்மக் கதை
இதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் அந்தக் கிளியிடம் அது எதனை உச்சரிக்கிறது என்று கேட்டனர். அந்தக் கிளி தனது முற்பிறவியை நினைவுகூர்ந்து தனது வரலாற்றைக் கூறத் தொடங்கியது: “முற்பிறவியில் நான் மிகுந்த கல்வி கற்ற பிராமணனாக இருந்தேன். ஆனால் எனது செருக்கின் காரணமாக, மற்ற அறிஞர்களை நான் இகழ்ந்து பேசினேன். என்னிடம் பொறாமை குணமும் மேலோங்கி இருந்தது. நான் இறந்த பிறகு பல நரகங்களில் வீழ்த்தப்பட்டு நீண்ட காலம் துயருற்றேன். அதன் பின்னரே இந்தக் கிளி உடலை அடைந்தேன்.
எனது முந்தைய பாவ வினைகளால், நான் குஞ்சாக இருந்தபோதே எனது தாய் தந்தையர் இறந்துவிட்டனர். ஒருநாள், தற்காப்பு ஏதுமின்றி நான் சுடும் மணலில் கிடந்தபோது, சில ரிஷிகள் என்னைக் கண்டு தங்கள் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கே அவர்கள் என்னைக் கூண்டில் வைத்துப் பராமரித்தனர். அந்த ஆசிரமத்தில் முனிவர்களின் குழந்தைகள் ஸ்ரீமத் பகவத்கீதையின் முதல் அத்தியாயத்தை பாராயணம் செய்து பழகிக் கொண்டிருந்தனர். அவர்கள் அந்த ஸ்லோகங்களைத் திரும்பத் திரும்பச் சொல்வதைக் கேட்டு, நானும் அவர்களுடன் சேர்ந்து அந்த ஸ்லோகங்களைச் சொல்லத் தொடங்கினேன்.
சிறிது காலத்திற்குப் பிறகு, ஒரு திருடன் என்னை அங்கிருந்து திருடி வந்து, இந்தப் புண்ணியவதியிடம் விற்றுவிட்டான்.”
வைகுண்டப் பிராப்தி
பகவான் விஷ்ணு தொடர்ந்து கூறினார்: “பிரியமான தேவியே! பகவத்கீதையின் முதல் அத்தியாயத்தைப் பாராயணம் செய்ததன் மூலம் அந்தக் கிளி முற்றிலும் தூய்மையடைந்தது. அந்தப் பாராயணத்தைச் செவிமடுத்ததன் மூலம் அந்தப் பெண்ணும் புனிதமானாள். மேலும், அந்தப் பலனின் ஒரு பகுதியை ஏற்றுக்கொண்டதன் மூலம் சுசர்மாவும் முழுமையானத் தூய்மையைப் பெற்றான்.”
பகவத்கீதையின் முதலாம் அத்தியாயத்தின் மகிமைகளைச் சற்று நேரம் கலந்துரையாடிய பிறகு, சுசர்மா தனது இல்லத்திற்குத் திரும்பினான். அவர்கள் மூவரும் தனித்தனியே ஸ்ரீமத் பகவத்கீதையின் முதல் அத்தியாயத்தைத் தொடர்ந்து பாராயணம் செய்து வந்தனர். அதன் விளைவாக, அவர்கள் மிக விரைவிலேயே உன்னதத் திருத்தலமான வைகுண்டத்தை அடைந்தனர்.
யார் ஒருவர் பகவத்கீதையின் முதல் அத்தியாயத்தைப் பாராயணம் செய்கிறாரோ, கேட்கிறாரோ அல்லது பயில்கிறாரோ, அவர் இந்த ஜட உலகத் துயரங்கள் என்னும் கடலை மிக எளிதாகக் கடந்து, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைத் திருவடிகளில் நித்தியத் தொண்டு செய்யும் பேற்றினை அடைவார்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆