இசையின் ஏழு சப்த ஸ்வரங்களான ஸ,ரி,க,ம,ப,த,நி என்பவை இசைக் கருவிகளில் உபயோகிக்கப்படுகின்றன. ஆனால் சாம வேதத்திலிருந்து தான் முதன்முதலாக அவை வந்தன. மாமுனிவரான நாரதர் பரமபுருஷரின் லீலைகளை விவரித்து சப்தங்களை எழுப்புகிறார். ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே / ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே என்பது போன்ற திவ்யமான ஓசைகளின் மூலமாக, அவர் தமது மனதை பகவானின் தாமரைப் பாதங்களில் பதியச் செய்கிறார். இவ்விதமாக அவர் புலன்களின் நாயகரான ரிஷிகேசரை நேருக்கு நேராக தரிசிக்கிறார். ஹர்யஸ்வர்களைக் கடைத்தேற்றிய பிறகு, நாரத முனிவர், பகவானின் தாமரைப் பாதங்களில் எப்பொழுதும் மனதைப் பதித்தவராய், எல்லாக் கிரக அமைப்புக்களிலும் தொடர்ந்து சஞ்சரிக்கலானார்.
மாமுனிவரான நாரதரின் மகிமை இங்கு விவரிக்கப்படுகிறது. அவர் பகவானின் லீலைகளைப் பற்றி எப்பொழுதும் பாடியபடி, இழிவடைந்த ஆத்மாக்களை மீட்டு பரமபுருஷரிடம் கொண்டு சேர்க்கிறார். இது தொடர்பாக, ஸ்ரீல பக்தி விநோத தாகுரர் பின்வருமாறு பாடியுள்ளார்:
இப்பாடலின் பொருள் என்னவெனில், மகாத்மாவாகிய நாரத முனிவர், ஸ்ரீ கிருஷ்ணரின் மற்றொரு பெயரான ராதிகா – ரமண என்ற நாமத்தைப் பாடியபடி தமது வீணையை மீட்டுகிறார். அவர் வீணையின் நரம்பை விரலால் சுண்டிய உடனேயே, எல்லா பக்தர்களும் பாட ஆரம்பிக்கின்றனர். இது அமுத மழை போன்ற இன்ப கானத்தை எழுப்புகிறது. எல்லா பக்தர்களும் ஆனந்தப் பரவச நிலையில் பூரண திருப்தி ஏற்படும்வரை ஆடி மகிழ்கின்றனர். அவ்வாறு ஆனந்தக் கூத்தாடும்பொழுது அவர்கள் மாதுரீ – பூர எனப்படும் பானத்தைப் பருகி உன்மத்த நிலையை அடைந்தவர்கள் போல் காணப்படுகின்றனர். அவர்களில் சிலர் அழுகிறார்கள், சிலர் நடனமாடுகிறார்கள், மற்றும் சிலர் வெளிப்படையாக நடனமாடவில்லை என்றாலும் இதயத்திற்குள் நடனமாடுகிறார்கள். சிவபெருமான் நாரத முனிவரை தழுவிக்கொண்டு தழுதழுத்த குரலில் பேசத் துவங்குகிறார். சிவபெருமான் நாரதருடன் கூத்தாடுவதைக் கண்ட பிரம்மதேவரும், “எல்லோரும் ‘ஹரி போல்! ஹரி போல்!’ என்று சொல்லுங்கள்” என்றவாறு அவர்களுடன் சேர்ந்து கூத்தாடுகிறார். சுவர்க்க ராஜனான இந்திரனும் படிப்படியாக அவர்களோடு சேர்ந்து கொண்டு “ஹரி போல்! ஹரி போல்!” என்று பாடிக்கொண்டே கூத்தாடத் துவங்குகிறார். இவ்விதமாக, பகவானுடைய புனித நாமத்தின் தெய்வீக ஓசையின் வசியத்திற்கு உட்பட்ட முழு பிரபஞ்சமும் பரவசமடைகிறது. “பிரபஞ்சம் பரவசமடையும்பொழுது நான் திருப்தியடைகிறேன். ஆகவே இந்த ஹரி நாம சங்கீர்த்தனம் இது போல் நன்றாக நடைபெற வேண்டுமென்று ஸ்ரீல ரூப கோஸ்வாமியின் தாமரைப் பாதங்களில் நான் பிரார்த்திக்கிறேன்” என்று ஸ்ரீல பக்திவிநோத தாகுரர் கூறுகிறார்.
“எப்பொழுதும் என்னைப் பற்றியே நினைத்துக் கொண்டு என் பக்தனாய் ஆவாயாக. என்னை வழிபட்டு, உனது வணக்கத்தை எனக்குச் சமர்ப்பிப்பாயாக. இவ்விதமாக நீ தவறாது என்னிடம் வந்து சேருவாய். நீ எனது பிரிய நண்பனென்பதால், உனக்கு இந்த வாக்குறுதியை நான் அளிக்கிறேன். எல்லா வகையான மதங்களையும் துறந்து, என்னிடமே சரணடைவாயாக. உன்னை எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் நான் விடுவிக்கிறேன். பயப்படாதே.”
( ஶ்ரீமத் பாகவதம் 6.5.22 / பொருளுரை )
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே