இந்த உலகில், எல்லாரும் உலகியல் இன்பம் பெற முயற்சி செய்கின்றனர்; ஆனால் நமக்குச் சிறிதளவு ஜடவுலக இன்பம் கிடைத்தவுடன், அதனோடு துன்பமும் உள்ளது. இந்த ஜடவுலகில் ஒருவர் கலப்படமில்லாத இன்பம் பெற முடியாது. ஒருவரிடம் இருக்கும் எந்த வித இன்பமும், துன்பத்தாலும் மாசுபடுத்தப்பட்டது. சான்றாக, நாம் பாலைக் குடிக்க விரும்பினால், பின்னர் ஒரு பசுவைப் பாதுகாத்து, அது பால் தரத் தகுதிவாய்ந்ததாக இருக்க வேண்டும். பால் குடித்தல் மிகவும் நல்லது; அது இன்பமானதும் ஆகும். ஆனால் பால் குடிக்க வேண்டும் என்பதற்காக ஒருவர் பல தொல்லைகளை ஏற்க வேண்டும். பகவானால் இங்கு குறிப்பிடப்பட்டதுபோல, யோக முறை இவ்வுலக இன்பத்தையும், இவ்வுலகின் துன்பத்தையும் போக்கவே உள்ளது. கிருஷ்ணரால் பகவத்கீதையில் கற்பிக்கப்பட்டதுபோல, சிறந்த யோகம் பக்தி யோகம் ஆகும். ஒருவர் சகிப்புத்தன்மையுடன் இருக்க முயற்சி செய்ய வேண்டும்; ஜடவுலக இன்பம் அல்லது துன்பத்தால் தொல்லை அடைதல் கூடாது என்று பகவத்கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜடவுலக இன்பத்தால் தான் தொல்லைக்கு ஆளாவதில்லை என்று கூறலாம்; ஆனால் ஒருவர் ஜடவுலக இன்பம் எனப்படுவதை அனுபவித்த பின்னர், ஜடவுலகத் துன்பமும் பின்தொடரும் என்பது அவருக்குத் தெரியாது. இதுவே இவ்வுலகின் சட்டமாகும். யோக முறை ஆத்மாவின் விஞ்ஞானம் என்று பகவான் கபிலர் குறிப்பிடுகிறார். ஒருவர் ஆன்மீகப் படித்தரத்தில் முழுமை அடைவதற்காக யோகப் பயிற்சி செய்கிறார். ஜடவுலக இன்பம் அல்லது துன்பம் பற்றிய கேள்வியே இல்லை; அது தெய்வீகமானது.
முழுமையான யோகம் ஒருவரை ஜடவுலக இன்ப, துன்பத்தின் நிலையினைக் கடக்கச் செய்கிறது என்று கபில முனிவர் கூறினார். அது எவ்வாறு செய்ய முடியும் என்பது இங்கு விளக்கப்பட்டுள்ளது. ஒருவர் தன் மனதையும், உணர்வையும் தூய்மைப்படுத்த வேண்டும். இதைப் பக்தி யோகத்தால் செய்ய முடியும். நாரத பஞ்சராத்திரத்தில் விளக்கப்பட்டதுபோல், ஒருவருடைய மனமும் புலன்களும் தூய்மைப்படுத்தப்பட வேண்டும் (தத்பரத்வேன நிர்மலம்). ஒருவருடைய புலன்கள் பகவானுடைய பக்தித் தொண்டில் ஈடுபடுதல் வேண்டும்; அதுவே முறையாகும். மனம் எதிலாவது ஈடுபட வேண்டும்; ஒருவர் மனதைக் காலியாக வைத்திருக்க முடியாது. ஆம்— மனதைக் காலியாக அல்லது வெற்றிடமாக வைக்கச் சில முட்டாள்தனமான முறைகள் முயற்சிக்கப்படுகின்றன, ஆனால் அது இயலாதது. மனதைத் தூய்மைப்படுத்தும் ஒரே முறை, அதைக் கிருஷ்ணரிடம் ஈடுபடுத்துதலாகும். மனம் ஈடுபட வேண்டும். நம் மனதைக் கிருஷ்ணரிடம் ஈடுபடுத்தினால், இயற்கையாகவே உணர்வு முழுவதும் தூய்மையடைகிறது. உலக ஆசை, பேராசை நம் சிந்தனையில் நுழைவதற்கு வாய்ப்பே இல்லை.
ஶ்ரீமத் பாகவதம் 3.25.13 & 16
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆