புலன்கள் உடலின் சுறுசுறுப்பான பகுதிகள்; அவற்றின் செயல்களை நிறுத்த முடியாது. செயற்கை முறைகளில் புலன்களின் செயல்களை நிறுத்த முயல்வது, விஶ்வாமித்ர முனிவரைப் போன்ற பெரும் யோகிகளின் விஷயத்திலும்கூட, பரிதாபகரமான தோல்வியை அடைந்துள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. விஶ்வாமித்ர முனி யோக சமாதியினால் புலன்களை அடக்கினார். ஆனால் ஸ்வர்கலோக மங்கையான மேனகையைச் சந்திக்க நேர்ந்தபொழுது, அவர் உடலுறவுக்கு அடிமையானார். செயற்கையான அவரது புலனடக்கம் தோல்வியடைந்தது. ஆனால் தூய பக்தர்களின் விஷயத்தில், புலன்கள் அவற்றின் செயல்களிலிருந்து செயற்கையான முறையில் விடுவிக்கப்படுகின்றன. புலன்களை அதிக கவர்ச்சியுள்ள செயல்களில் ஈடுபடுத்தும்பொழுது, தாழ்ந்த செயல்களால் அவை கவரப்படுவதற்கு வாய்ப்பில்லை. புலன்களை உயர்ந்த ஈடுபாடுகளால் மட்டுமே கட்டுப்படுத்த இயலும் என்று கீதை கூறுகிறது. புலன்களைத் தூய்மைப்படுத்துதல் அல்லது அவற்றை பகவானின் தொண்டில் ஈடுபடுத்துதலே பக்தித் தொண்டாகும். பக்தித் தொண்டென்பது செயலற்ற தன்மையல்ல. பகவானின் தொண்டில் செய்யப்படும் எதுவும், அதன் ஜடத் தன்மையிலிருந்து உடனே தூய்மை அடைகிறது. பௌதிக எண்ணம் அறியாமையால் மட்டுமே விளைவதாகும். வாசுதேவனுக்கு அப்பால் எதுவுமே இல்லை. பகவானைப் பற்றித் தொடர்ந்து செவியுறுவதால் வாசுதேவ உணர்வு இதயத்தில் படிப்படியாக வளர்கிறது. ஆனால் வாசுதேவனே அனைத்தும் என்ற முடிவுக்கு வரும்பொழுது வளர்ச்சி முற்றுப்பெறுகிறது. பக்தித் தொண்டின் விஷயத்தில், இம்முறை ஆரம்பத்திலிருந்தே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மேலும் பக்தரின் இதயத்திலிருந்துகொண்டே பகவான் அவனுக்கு உபதேசிப்பதால், அவரது கருணையால் உண்மையான அறிவு பக்தரின் இதயத்தில் வெளிப்படுகிறது. எனவே பக்தித் தொண்டால் புலன்களைக் கட்டுப்படுத்துவதுதான் சுலபமானதும், ஒரே வழியுமாகும்.
(ஶ்ரீமத்-பாகவதம் 1.10.23 – பொருளுரை / அருளியவர்: ஶ்ரீல பிரபுபாதர்)
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆