துருவ மன்னர் ஒரு முக்தியடைந்த ஆத்மா, ஆதலால் அவர் யாரிடத்தும் சினங்கொள்வதில்லை. ஆயினும் அவர் ஒரு நாட்டை ஆளும் மன்னராதலின், சட்டம் ஒழுங்கைக் காப்பதற்காக அவர் சில நேரம் ஆத்திரமடைவது அவரது கடமையாகிறது. எந்தவிதக் குற்றமும் செய்யாத அவர் சகோதரன் உத்தமன் ஓர் யக்ஷனால் கொல்லப்பட்டான். அதனால் அக்குற்றவாளியைக் கொல்வது (உயிருக்கு பதில் உயிர்) துருவரின் கடமையாகிறது; ஏனெனில் அவர் ஓர் அரசர். போட்டி என்று வந்தவுடன் துருவ மன்னர் தீவிரமாகப் போராடி யக்ஷர்களைப் போதுமான அளவிற்குத் தண்டித்தார்.
ஆனால் சினமானது நாம் அதிகப்படுத்தினால் அது அளவின்றி அதிகமாகும் தன்மை உடையதாகும். துருவரின் ஆத்திரம் கரை மீறாத வண்ணம் அவர் தாத்தா மனுவினால் அன்புடன் அமைதிப்படுத்தப்பட்டார். துருவரும் தனது தாத்தாவின் எண்ணம் என்ன என்பதைப் புரிந்துகொண்டதினால் போரை உடனே நிறுத்தினார். சுலோகத்திலுள்ள “ஸ்ருதேன பூயஸா” அதாவது “தொடர்ந்து கேட்பதினால்” என்னும் சொல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பக்தித் தொண்டைப் பற்றித் தொடர்ந்து கேட்பதின் மூலம் பக்தித் தொண்டிற்குத் தீங்கிழைக்கும் ஆத்திரத்தினை அடக்குதல் கூடும்.
ஸ்ரீல பரீக்ஷித்து மகாராஜா, பகவானின் திருவிளையாடல்களைப் பற்றித் தொடர்ந்து கேட்பது என்னும் சஞ்சீவியானது அனைத்து நோய்களையும் நீக்கும் என்று கூறுகிறார். ஆகையினால் ஒவ்வொருவரும் முழுமுதற் கடவுளைப் பற்றித் தொடர்ந்து கேட்டல் வேண்டும். இவ்வாறு கேட்பதினால் ஒருவன் சமநிலையில் எப்போதும் இருப்பதோடு, அவனது ஆன்மீக வாழ்க்கையின் வளர்ச்சிக்கும் எந்தவித ஊறும் நேராது.
துஷ்டர்களிடம் கோபம் கொண்ட துருவ மன்னரின் செயலானது சரியானதே. இது தொடர்பாக நாரதரின் உபதேசத்தினால் பக்தனாகிய ஒரு பாம்பின் கதை இருக்கிறது. பக்தி வாய்ந்த ஒரு பாம்பிடம், இனிமேல் யாரையும் கடிக்கக் கூடாது என்று நாரதர் கூறியிருந்தார். பாம்பின் குணம் பிற உயிரைக் கடிப்பதுதான். இந்தப் பாம்பு அவ்வாறு செய்யாதிருந்தது. பாம்பின் இந்த நற்செயலைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள், குறிப்பாகச் சிறுவர்கள், அதன் மீது கல் வீசித் தாக்கினார்கள். ஆனால் அது தனது ஆன்மீகக் குருவின் கட்டளைப்படி யாரையும் கடிப்பதில்லை.
சிறிது காலத்திற்குப் பின் அது தனது ஆன்மீகக் குருவான நாரதரைச் சந்தித்த பொழுது, “நான் பிற உயிர்களைக் கடிப்பது என்னும் எனது துஷ்ட குணத்தை விட்டுவிட்டேன். அதனால் கண்ட பலன், ஒரு சிறுவன் என்னிடம் அச்சங்கொள்ளாது என்மீது கல் வீசித் தாக்குகிறான்” என்று புகார் செய்தது. அதற்கு நாரத முனிவர், “கடிக்கக் கூடாது என்பது உண்மைதான்; ஆனால் உனது படத்தை விரித்துக்கொண்டு கடிப்பது போல் சீறு, அப்போது அவர்கள் அஞ்சி ஓடுவர்” என்று மீண்டும் அறிவுறுத்தினார். இதுபோல் ஒரு பக்தன் எப்போதும் அஹிம்சாவாதியாகவே இருத்தல் வேண்டும்; அனைத்து நற்குணங்களும் உடையவனாகவும் இருத்தல் வேண்டும். ஆயினும் பொதுவாகப் பிறர் தவறு செய்தால் அவர்களிடம் ஆத்திரம் கொள்ளாதிருக்கக் கூடாது. குறைந்தபட்சம் அத்துஷ்டர்களை விரட்டுவதற்காகவேனும் அந்நேரம் ஆத்திரம் கொள்ளலாம்.
மனு தன் பேரன் துருவ மஹாராஜா விற்கு செய்த உபதேசம்
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஸம்யச்ச ரோஷம் பத்ரம் தேப்ரதீபம் ஸ்ரேயஸாம்
பரம்ஸ்ருதேன பூயஸா ராஜன்ன் அகதேன யதாமயம்
மொழிபெயர்ப்பு
அன்பார்ந்த மன்னனே, நோய்தீர்க்கும் மருந்தாக விளங்கும் நான் சொன்ன கருத்துக்களைச் சிந்திப்பாயாக. சினம் ஒழி, ஆன்மீக உணர்வுப் பாதையில் முன்னேற விடாதுதடுக்கும் மோசமான எதிரி இச்சினமேயாகும். உனக்கு அனைத்துச் சிறப்புகளும் உண்டாவதாக.எனது அறிவுரைகளைப் பின்பற்றுவாயாக.
ஶ்ரீமத் பாகவதம் 4.11.31
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆