ஆத்மாவை மறைக்கும் ஐந்து வகையான அகஙகாரங்கள்
கிருஷ்ணா புத்தகத்தில் ஸ்ரீல பிரபுபாதா, ஆத்மாவை மறைக்கும் ஐந்து வகையான அகங்காரங்களை விளக்குகிறார்: “உடலுக்குள் ஐந்து பிரிவுகளைக் கொண்ட வாழ்வு நிலைகள் உள்ளன. அவை அன்ன-மயம், ப்ராண-மயம், மனோ-மயம், விஞ்ஞான-மயம் மற்றும் ஆனந்த-மயம் எனப்படுகின்றன. (இவை, தைத்திரீய உபநிஷத்தின் பிரம்மாண்டவல்லியில் விவரிக்கப்பட்டுள்ளன).
வாழ்வின் துவக்கத்தில் ஒவ்வொரு ஜீவனும் உணவைப் பற்றிய உணர்வை மட்டுமே கொண்டுள்ளான். ஒரு குழந்தை அல்லது ஒரு மிருகம் நல்ல உணவைப் பெறுவதால் மட்டுமே திருப்தியடைகிறது. திருப்தியாக உண்பதையே இலட்சியமாகக் கொண்டுள்ளன. இந்த உணர்வு நிலை, அன்னமயம் என்று அழைக்கப்படுகிறது. அன்னம் என்றால் “உணவு” என்று பொருள்படும்.
இதன்பிறகு உயிர் வாழ வேண்டும் என்ற உணர்வு நிலையில் ஒருவன் வாழ்கிறான். ஒருவனால் தன் வாழ்வை எந்தப் பாதிப்பும் அல்லது அழிவும் இல்லாமல் தொடர முடியுமானால், தான் மகிழ்ச்சியடைவதாக அவன் நினைக்கிறான். இந்நிலை, உயிர் வாழ் உணர்வு (ப்ராணமயம்) என்று அழைக்கப்படுகிறது. இந்நிலைக்குப் பிறகு, ஒருவன் மனோ தளத்தில் இருக்கும் பொழுது அவ்வுணர்வு மனோமயம் என்று அழைக்கப்படுகிறது.
பௌதிக நாகரிகமானது முக்கியமாக இம்மூன்று படிகளில் தான் அமைந்துள்ளது – அன்ன-மயம், ப்ராண-மயம் மற்றும் மனோமயம். நாகரிகமடைந்த மனிதர்களின் முதல் கவலை பொருளாதார முன்னேற்றமாகும். அடுத்த கவலை, அழிவை எதிர்த்துத் தற்காத்துக்கொள்வது, அடுத்ததாக வரும் உணர்வு மனோ தத்துவமாகும். அதாவது, வாழ்வின் முக்கியத்துவங்களைப் பற்றித் தத்துவார்த்தமான அணுகுமுறை.
ஆன்மீக விழிப்புணர்வு
இத்தகைய தத்துவார்த்தமான அணுகுமுறையின் படிப்படியான முன்னேற்றத்தினால் ஒருவன் புத்தி கூர்மையுள்ள படித்தரத்தை அடைந்து, தான் ஜட உடலல்ல, ஆன்மீக ஆத்மா என்பதைப் புரிந்து கொள்ள நேர்ந்தால், அவன் விஞ்ஞான-மயம் என்ற நிலையில் இருப்பவனாகிறான். பிறகு ஆன்மீக வாழ்வின் பரிணாம வளர்ச்சியின் மூலம் அவன் பரமபுருஷரை, அல்லது பரமாத்மாவை அறியும் நிலைக்கு வருகிறான். பிறகு பகவானுடனான தனது உறவை விருத்தி செய்துகொண்டு, பக்தித் தொண்டில் அவன் ஈடுபடுவானாயின், அந்நிலை கிருஷ்ண உணர்வு (ஆனந்த-மயம்) நிலை என்று அழைக்கப்படுகிறது.
ஆனந்தமயம் என்பது, அறிவும், நித்தியத் தன்மையும் நிறைந்த ஆனந்தமான வாழ்வாகும். ‘ஆனந்தமயோ ப்யாஸாத்’ என்று வேதாந்த சூத்திரம் கூறுகிறது. அதாவது பரப்பிரம்மனும் (பரமபுருஷர்), அவருக்குக் கீழ்ப்பட்ட பிரம்மனும் (ஜீவராசிகள்) இயல்பாகவே ஆனந்த மயமானவர்கள். ஜீவராசிகள் நான்கு கீழ்நிலைகளான, அன்ன-மயம், ப்ராண-மயம், மனோ-மயம் மற்றும் விஞ்ஞான-மயம் ஆகிய நிலைகளில் உள்ள வரையிலும், அவர்கள் பௌதிகச் சூழ்நிலையில் இருப்பவர்களாகக் கருதப்படுகின்றனர்.
ஆனால் ஆனந்த-மய நிலையை அடைந்த உடனேயே ஒருவன் முக்தியடைந்த ஆத்மாவாக ஆகிவிடுகிறான். இந்த ஆனந்த-மய நிலையானது பகவத்கீதையில் ப்ரஹ்ம-பூத நிலை என்று விவரிக்கப்படுகிறது. இந்நிலையில் கவலையோ, ஆசையோ இல்லை என்று அங்கு கூறப்படுகிறது. ஒருவன் எல்லா ஜீவராசிகளிடமும் சமமாக நடந்து கொள்ளும் பொழுது இந்நிலை துவங்குகிறது.
உண்மையான ஆனந்தம்
பிறகு இது கிருஷ்ண உணர்வுப் படிக்கு விரிவடைகிறது. இக்கிருஷ்ண உணர்வு நிலையில் ஒருவர் பரம புருஷருக்குத் தொண்டு செய்ய விரும்புகிறார். பக்தித் தொண்டில் முன்னேற வேண்டும் என்ற இந்த ஆசை, பௌதிக இருப்பில் புலன் நுகர்விலுள்ள ஒருவனது ஆசைக்குச் சமமானதல்ல. அதாவது ஆன்மீக வாழ்விலும் ஆசை இருக்கிறது என்றாலும், அது தூய்மையான ஆசையாகும். நம்முடைய புலன்கள் தூய்மையடையும் பொழுது, அவை அன்ன-மயம், ப்ராண-மயம், மனோ-மயம் மற்றும் விஞ்ஞான-மயம் ஆகிய எல்லா பௌதிக நிலைகளிலிருந்து விடுபட்டு, மிக உயர்ந்த நிலையான ஆனந்த-மய நிலையில், அதாவது ஆனந்தமான கிருஷ்ண உணர்வு நிலையில் அவை நிலை பெறுகின்றன.
மாயாவதி தத்துவவாதிகள் ஆனந்த-மய நிலையை, பரமனுடன் இரண்டறக் கலக்கும் நிலையென்று கருதுகின்றனர். அவர்களுக்கு ஆனந்தமயம் என்றால், பரமாத்மாவும், ஜீவாத்மாவும் ஒன்றாக மாறுவதாகும். ஆனால் உண்மையில் ஒருமை என்பது, பரமனுடன் இரண்டறக் கலந்து, தனது தனிப்பட்ட வாழ்வை ஒருவன் இழந்து விடுவதைக் குறிப்பதாகாது.
ஆன்மீக இருப்பில் கலந்து விடுவதென்பது, பூரண நித்தியத் தன்மையும், அறிவும் கொண்ட பரம புருஷருடனான குண ஒற்றுமையை ஜீவராசி உணரும் நிலையாகும். ஆனால் பக்தித் தொண்டில் ஈடுபடும் பொழுதே உண்மையான ஆனந்தமயம் அடையப்படுகிறது. அது ‘மத்-பக்திம் லபதே பராம்’ என்று பகவத்கீதையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பரமபுருஷருக்கும், கீழ்ப்பட்ட ஜீவராசிக்கும் இடையில் அன்புப் பரிமாற்றம் ஏற்படும் பொழுது தான் ப்ரஹ்ம-பூத ஆனந்த-மய நிலை முழுமையடைகிறது.
ஒருவன் ஆனந்த-மயம் என்ற இந்த நிலைக்கு வர வேண்டும். இல்லையெனில் அவனது சுவாசம் கொல்லனுடைய துருத்தியின் சுவாசத்திற்கு ஒப்பாகும். அவனது ஆயுள் ஒரு மரத்தின் ஆயுளுக்கு ஒப்பாகும். மேலும் அவன் தாழ்ந்த மிருகங்களான நாய், பன்றி, ஒட்டகம் போன்றவைகளை விட எவ்விதத்திலும் சிறந்தவனல்ல.
(ஸ்ரீமத்-பாகவதம் 10.87.17 / பொருளுரை )
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆